Friday, 6 February 2015

பன்சால்களால் முடிந்தது தமிழரால் முடியாதா?

பன்சால்களால் முடிந்தது தமிழரால் முடியாதா?

ஒவ்வொரு பத்து வருடங்களுக்கு ஒரு முறை சில துறைகள் முன்னணியில் வந்து புதிய கோடிஸ்வரர்களை உருவாக்கி செல்லும்.


நாராயண மூர்த்தி, அசிம் பிரேம்ஜி, அடோனி, சிவ்நாடார் போன்ற புதியவர்கள், எதிர்காலத்தை சற்று முன்னால் கணித்ததால், எதிர்பாராத அளவு மேலே சென்றனர்.

ஒரே கார்ட் மாயம் தான்..
முப்பது வருடங்கள் முன் மென்பொருள் ஒன்று இருப்பதே நமக்கு தெரியாது. ஆனால் அதற்கு இந்திய சூழ்நிலைகளின் சாதகத்தை இனங்கண்டு பார்த்ததன் மூலம் இன்று உலக சிறந்த நிறுவனங்கள் வரிசையில் இந்திய மென்பொருள் நிறுவனங்கள் உள்ளன.

அதே போல் பெட்ரோலிய பொருட்கள் சார்ந்த தேவைகள் அதிகமாக இருப்பதை உணர்ந்து, அடோனி உட்பட பல புதிய தொழிலதிபர்கள் உருவாகினர்.

இவர்கள் ரிலையன்ஸ், டாடா போன்ற பாரம்பரிய நிறுவனங்களில் இருந்து வந்தவர்கள் அல்ல. சிறிய தொழில் முனைவர்களாக இருந்து தங்களை உயர்த்திக் கொண்டவர்கள்.

அந்த வரிசையில் அடுத்த பத்து வருடங்களுக்கு இந்தியாவை ஆளப்போகும் ஒரு துறையாக இருக்கப் போவது இ-காமர்ஸ் என்று சொல்லப்படும் இணைய வணிகம்.

ஏற்கனவே Snap Deals, Flip Kart, Myntra என்ற பெயரில் பல நிறுவனங்கள் வந்துள்ளன. ஆனாலும் தேவை மற்றும் தரம் காரணமாக இன்னும் வெளி அதிகமாகவே காணப்படுகிறது.

இதன் 'பிசினஸ் மாடல்' என்பது ஏற்கனவே வெளிநாடுகளில் நல்ல வளர்ச்சியடைந்த நிலையில் உள்ளது. அதனை இந்திய சூழ்நிலைகளுக்கு தக்க மாற்றுவதன் மூலம் எளிதில் இலக்கை அடையலாம்.

இது தொடர்பாக ஒரு அதிர்ச்சியான, வித்தியாசமான தகவல்..

இந்தியாவின் இணைய வணிக சந்தையின் மொத்த மதிப்பு 12000 கோடி. அதில் 10000 கோடியை சொந்தமாக்கி இருப்பது ராஜஸ்தானை சேர்ந்த பன்சால் என்ற ஒரு பிரிவினர் மட்டுமே.

ஆமாம்..

இவர்கள் தான் FlipKart, Myntra, LensKart, SnapDeal போன்ற நிறுவனங்களை நடத்தி வருபவர்கள். இவர்கள் அனைவரும் முப்பது வயதளவில் மட்டுமே இருப்பவர்கள். விவரங்களுக்கு கீழே பார்க்க..


எல்லாம் பன்சால்களுக்கே! 

பொதுவாக மேற்கு இந்தியாவில் ஏட்டுப் படிப்பை விட அனுபவத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள். அதனால் தான் அந்த பகுதிகளில் கல்வியறிவு குறைவாக இருந்தாலும், செல்வத்திற்கு குறைவில்லை. இது தான் ஷேட்  காலம் முதல் பன்சால் வரை தொடர்கிறது.

தமிழ்நாட்டில் நாடார் சமூகம் மற்றும் கோயம்புத்தூர் பகுதிகளில் மட்டுமே இத்தகைய தொழில் முனையும் முயற்சிகள் காணப்படுகிறது.

மற்ற பகுதிகளில் அடுத்தவரிடம் சம்பளம் வாங்கும் அடிமையாகவே இருக்க விரும்புகிறோம். இதனால் தான் நாம் கல்வியறிவில் ஜொலித்தாலும், கணிசமான அளவு தொழிலதிபர்களை தமிழகம் தர முடியவில்லை.

இதனை எதிர் காலத்தில் மாற்றி அமைவதற்கு உள்ள ஒரு வாய்ப்பாக இணைய வணிகத்தைக் கருதி கொள்ளலாம்.

ஏற்கனவே கட்டமைக்கப்பட்ட துறையில் பெரிய சிங்கங்களுடன் மோதுவதற்கு பதிலாக, இந்த மாதிரி புதிய துறைகளில் புதிய ஐடியாக்களுடன் முனைவது அதிக பலனைத் தரும்.

திருநெல்வேலி அல்வா, காஞ்சி பட்டு, தஞ்சாவூர் பொம்மை, சேலம் மாம்பழம், சிவகாசி பட்டாசு போன்ற புவியியல் பெயர் பெற்ற தயாரிப்புகளை மக்கள் இருந்த இடத்திலிருந்தே பெறுவதற்கு அதிக ஆசைப்படுவார்கள்.

இந்தியாவிலிருந்து மட்டும் இரண்டு கோடி மக்கள் வெளிநாட்டு வாழ் இந்தியர்களாக உள்ளனர். ஆனால் இந்திய உணவுப் பொருட்கள் மற்றும் இந்திய சூழ்நிலைக்கேற்ற பொருட்கள் உலகம் முழுவதும் சென்றடைய இன்னும் கட்டமைக்கப்பட்ட தளம் இல்லை.

இப்படி பல வகையான தேவைகள் நம்மை சூழ்ந்து காணப்படுகின்றன.

இந்த மாதிரியான சூழ்நிலைகளை நாம் வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

திறனான பின்புல சப்ளை செயினும், வாடிக்கையாளர்களுக்கு சென்று சேர்க்கும் சரியான முறையையும் அதிகம் கவனத்தில் கொண்டால் இந்த துறையில் வெற்றி பெறுவது அவ்வளவு கடினமல்ல. இதற்கு முன் இந்த துறையில் வெற்றி பெற்ற பன்சால்களும் அந்த அளவு பெரிய பின்புலம் கொண்டவர்கள் அல்ல.

இந்தியாவில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 40% மக்கள் இணையத்தை அதிகமாக பயன்படுத்துவார்களாம்.  அப்படிப் பயன்படுத்த ஆரம்பிக்கும் பொது இணைய வணிகம் தானாக வளர ஆரம்பிக்கும்.

அடுத்த பத்து  வருடங்களுக்கு இணைய வணிகம் வருடத்திற்கு 20% என்ற விகிதத்தில் வளர்ச்சி அடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதனால் சிறுதொழில் முனைவர்களுக்கு 'இணைய வணிகம்' தற்போது சிறந்த வாய்ப்பாக இனங்காணப்பட்டுள்ளது.

வாய்ப்புகளை சரியாக பயன்படுத்துவோம்!

பொருளாதாரம் முன்னேற்றம் அடைந்தால் தான் அரசியல் அதிகாரங்களும் தமிழர்களுக்கு கிடைக்கும்.